Tuesday, June 23, 2015

குனிவு இன்றி நிமிர!





பண்போடு பணிவெடுத்து
அறிவோடு அடக்கமுற்று
தன்னிலை தாழ்த்துவோரை
மேன்னிலை தேடி வரும்!

ஆணவம் தலைக்கெடுத்து
ஞானச் செருக்கிலெவர்
வானம் தொட் டெகிறினும்
ஊனமுற் றுள்ளமுழல்வர் !

மமதை மதமெடுத்து
மண்ணில் மற்றவரை
மதியாதொழுகும் பாங்கால்
மிதியுற்றழிவார் அவர்!

உயர வளரும் மூங்கில்
தாழ்வளைந்தன்னைத் தாழ்த்தி
உயர்ந்த புல்லாய் உலகில்
நிமிர்ந்து நிற்றல் போல

உயர்வு உன்னில் உயர
பணிவு தன்னில் மூழ்கி
உயர்வாய் உலகத்துள்ளம்
குனிவு இன்றி நிமிர!

-தமிழினியன் பிரபாகரன்-

No comments:

Post a Comment