மறுதழி நெகிழி
நெகிழியின் பிறப்பால்
நெறிபிறழ்ந்தது இயற்கை
அவனியினழகை கற்பழித்து
குப்பைகளாயாங்கே குன்றுகள்
பிரசவிக்க
மண்ணோடுமண்ணாகும்
படைப்பிலக்கணம் மீற
விண்ணேகும் மேடாய்
நாற்றங்களின் பீடங்கள்.
ஏற்றங்கொண்டறிவு
ஏகி மேலோங்கி மனிதன்
ஆகியவழியெலெல்லாம்
நெகிழி புகுத்தி
அகிலமடியையின்று
அவலமாக்கி விட்டான்.
ஆழி குளமாறு
எழிலேரிக்கரையெல்லாம்
வீதிவழியெங்கும்
மீதியின்றியிடம்-கண்
மோதிக்ககிடப்பதெல்லாம்
வேதியல் அழிவற்ற
நெகிழிக்கழிவன்றோ.
நூறாண்டு முன்னே
யாரார் கண்டார்
பார் மீதிலிங்கே
போராக குவிந்த
பேரிமயக்குப்பை?
நாமறிந்த வகையில்
கழிவெல்லாமன்று
கழிவின்றி மண்ணில்
மக்கியழிந்து
மண்ணோடுமண்ணாகி
பார்மடியில் உயிராய்
மீண்டெழக் கண்டோம்
யார்கொண்ட சாபம்
கழிவெல்லாமின்று
அழிவின்றி நின்று
பலியாக மீண்டும்
உயிர் கொல்லக்
கண்டோம்
மறுதலித்து நெகிழி
மாற்றீடு கண்டு
மரபுவழி மீண்டு
மனிதர் நாம்
திரும்பி
இயற்கை நேயம்
காத்து இயைந்து வாழ
விளைதல் காலமிடும்
ஆணை
மீறி மேலும் முன்னே
ஏறிநாமும்
சென்றால்
இயற்கையெம்மை ஏறி
வதம் கொள்ளும்
திண்ணம்
-தமிழினியன் பிரபாகரன்-
No comments:
Post a Comment