Friday, February 6, 2026

 முகமலர்ந்த சிரிப்பதனுள் 

அகம் முறைத்த 

சினம் புதைத்து 

புஜமணைத்து

புறமுதுகில் 

குத்துகின்ற

நிஜமில்லா

மனிதக்

குழுவில்,

புழுவாக நான்

நெளிகின்றேன்

வழியின்றிச் சிரிப்பணிந்து

வலிதாங்கி

வலிதாக்கி

மனமதனை.

Thursday, January 22, 2026

 மரணம் யாருக்கும் 

பொதுவானது!

வரும் தருணம்

எதுவென்று

தெரியாதது!

மறு கணம் கூட

இங்கு உறுதி

இல்லாதது!

வயதென்று 

வரம்பென்று

பார்க்காதது!

அரசன் 

ஆண்டியெனத்

பிரிக்காதது!

ஓடி ஒழிந்தாலும்

விடாதது!

பின்னெதற்கிந்த

ஆணவ ஆட்டம்!?

ஆசைகள் பின்னோட்டம்!?

இருப்பதைப் பகிர்ந்து

சக உயிரினை மதித்து

சகஜமாய் வாழ எது இங்கே தடுக்கிறது?

சிரஞ்சீவிகள் இருந்தால்

சொல்லுங்களேன்!

Sunday, January 11, 2026

இது புதுசு!நீ புதுசு!


எல்லோரும் போலவே நீயிருந்தால் 

எல்லோரில் யாராய் நீயிருப்பாய்?

வித்தியாசப்படு! 


ஒத்திவைத்தவுன் எத்தனத்தில் 

சொத்தியாகுமுன்னிலக்கு! 

இன்றே செய்! 


முயலாமல் முடியாது 

முன்சென்று நீ வெல்ல! 

முயற்சி செய்!


தோல்விக்குத் துவண்டால் நீ 

கேள்வியின்றித் தொடரும் தோல்வி! 

எழுந்துநில் !


கட்டம் கட்டி முட்டி நின்றால் 

ஒட்டு முறிந்து விலகுமுறவு!

விட்டுக்கொடு! 


மறக்காத் துரோகம் உனையென்றும் 

உள்ளிருந்துருக்கும்! 

மறந்துவிடு! 


மன்னித்தல் உன்னை 

மனிதரில் மாண்புறுத்தும் !

மன்னித்து விடு!


செல்லும் செல்வத்தோடு 

செல்லாதிருக்கவுன் புகழ் !

தானம் செய்!


-தமிழினியன் பிரபாகரன்-

Saturday, July 11, 2015

மனைவி என்பவள்!

மாற்றுத் தாய் அவள்
மனைவி என்பவள்!
ஏற்றி எமை நெஞ்சில்
போற்றி வைப்பவள்!

வம்சம் வாங்கி
வடித்துக் கொடுப்பவள்!
அம்சமாயதை
செதுக்கித் தருபவள்!

மூத்த குழந்தையாய்
தத்தை எடுத்தெனை
கத்தை கத்தயாய்
முத்தம் பொழிபவள் !

உணர்வை உள்ளுக்குள்
இறங்கிப் பார்த்தவள்
உணர்ந்து தேவையை
சிறந்து செய்பவள்!

ஓய்ந்து அவளை
பார்க்க ஆசை தான்!
சாய்த்து மடியில்
தூங்க ஆசை தான் !

சாய்ந்து அவள்
தூங்கும் அழகிலும்
ஓயும் வீட்டின்
அமைதி கொல்லுமே!

தாய்க்கு மட்டுமா நம்
தீராக் கடன்!?
வாய்த்த மனைவிக்கும் நாம்
ஆறாக் கடன் !

-தமிழினியன் பிரபாகரன்-

Sunday, June 28, 2015

நமது நிஜம்!?

நிஜங்களின்
முகங்களை
நிஜமாய்
யார் காட்டியது?

பொய்களைப்
போர்த்தியே
மெய்களை மூடித்
திரிகிறோம்!

செய்வதொன்றாக
சொல்வது
வேறாக !

நீயென்ன ?
நானுமோர்
அரசியல்வாதி
தான்!

நாலு பக்க
சுவருக்குள்
நூறு வீத
மறைவுக்குள்

நாம் செய்வதும்
நமக்குள் நாம்
சொல்வதும் தான்
நமது நிஜம் !

பொய் களைந்து
துகிலுரித்து
நம் நிர்வாண
நிஜங்களை
காட்டுகின்ற
வீதத்தில் தான்
நாம்
நல்லவராய்
கெட்டவராய்
சமூகத்தில்
வாழ்கின்றோம் !

நிஜம் தானே
நான்
சொல்வது!?


-தமிழினியன் பிரபாகரன் -

Saturday, June 27, 2015

ஆசு அறியும் ஆசிரியனா நீ?



ஆசு அறியும்
ஆசிரியனா நீ?
வீசு உன்
வாளை!
பேசட்டும் உன்
பேனை !

மோசமாக
நாசமாக்கு
அறியாமையை !

காட்டமாக
போட்டுத் தாக்கு
முயலாமையை !

சாமான்யனா நீ?
அகிலத்தின்
அச்சாணி
செய்யும்
கொல்லன்
அல்லவா நீ?

குறை!
உன்னைக்   
குறை சொல்லி
சுட்டும்
விரல்களை !

கூட்டு
ஏற்றம் சொல்லி
உன்னைக்
காட்டும்
விரல்களை !

முடிந்தவனை
விட்டு விடு !
முடியாதவனை
மட்டும் எடு!

முடிந்தவனுக்கு
வழி சொல்!
முடியாதவனுடன்
வழி செல்!

உன்
முயலாமைக்கு
முடியாதவனை
முண்டு
கொடுக்காதே!


முடிந்தவன்
முதுகிலேறி நீ
விருதுக்கு
பெயர் கொடுக்காதே!

முடியாதவனை
முன்கொணர்ந்து
ஆத்மா திருப்தியை
முகர்ந்து பார்!

விருதுகளும்
பாராட்டும்
வெறும்
காகிதமாய்
போகுமுனக்கு !

அகராதியில்
ஆசிரியனுக்கு
அர்த்தமாவாய் !

-தமிழினியன் பிரபாகரன் -