Friday, June 12, 2026

 இடைத்தரகன் நான்!!

இறைவனுக்கும் 

இரந்து நிற்கும் மனிதனுக்கும் 

இடையில் நானொரு 

இடைத்தரகன்!

இறைவனாய்

இரப்போருக்கு 

வரமாய் வாரிவழங்கும்

மனமுள்ளோரிடம்

யாசகனாய்

இருகரமேந்தி நான்

இரந்து வாங்கும் உதவிகளை

தரகேதும் கழித்திடாமல்

இரப்போரின் கரம் சேர்க்கும்

இடைத்தரகன் நான்!

சில நேரம் 

இருக்கும் போது 

நானும் வரமளிக்கும்

இறைவனாவதுண்டு!

உணர்ந்து சொல்கிறேன்!

இருப்பதைக் கொஞ்சம்

பகிர்ந்து கொடுத்துப் பாருங்கள்

இறைவனைத்தேடி

அவனில்லமோட தேவை வராது!

இறைவனாய் நீங்களே

இறுமாந்து கொள்ளுமோர்

ஆத்மதிருப்திகாண்பீர்!

இறைவனின் ஆசியும் தேடி

உங்களை

வந்து சேரும்.!

இருந்தால் தான் 

இரப்போருக்கு 

ஈயலாமென்றில்லை!

இருப்போரிடம்

இருகரமேந்தி

இரந்து பெற்றும்

ஈயலாம் தப்பில்லை!

வெட்கமும் தன்மானமும்

துறந்தவொரு

துறவு நிலை கொண்டால்!

மறந்தும்

அதில் 

தரகேதும் கொண்டு 

உங்கள்

தரம் தாழ்ந்திடாமல்

இடைத்தரகனாகியும்

தேடலாம்

புண்ணியம்!

தாழ்வின்றி

நெஞ்சுயுர்த்தி

இறுமாந்து

சொல்வேன்

இல்லையென்று

கைவிரித்து

இரப்போரை

ஏமாற்றியதில்லை!

இருப்போரிடம்  கையைந்தி

இரப்போரின்

பசியாற்றும்

இடைத்தரகன்

நான்!


 -தமிழினியன் பிரபாகரன்-

Thursday, June 4, 2026

 ஆச்சரிய ஆசிரியம்!


சுயம்புவாய் 

சுயம் கற்று

சுயமாய்க் கற்று

அமீபாவான்று ஆறறிவு பெற்று

அவனியிலென்றோ

எழுந்த போது

ஆசிரியமங்கே ஆச்சரியமாயொரு தொண்டாய்த்தானே

தொடங்கியிருக்கும்.!?


தெரிந்ததைப் பகிர்ந்து

அறிந்ததைச் சொல்லி அடுத்தவரறிவும்

அடுத்த படிக்கெடுத்து

அவனியை மெல்ல

அறிவுக்கிரகமாக்கிய

ஆசிரியமன்று

அறியாமல் வந்த முதல் தொழில் தானே!

சுயநலமன்று

சுயோமோச்சியிருந்தால்

நானும் கூட இன்னும்

ஜடமொன்றாய் எங்கோ பரிணாமமற்ற

ஓரறிவுயிர் தானே !


-தமிழினியன் பிரபாகரன்-

Friday, April 17, 2026

 மறுதழி நெகிழி


நெகிழியின் பிறப்பால்

நெறிபிறழ்ந்தது இயற்கை


அவனியினழகை கற்பழித்து

குப்பைகளாயாங்கே குன்றுகள்

பிரசவிக்க


மண்ணோடுமண்ணாகும்

படைப்பிலக்கணம் மீற

விண்ணேகும் மேடாய்

நாற்றங்களின் பீடங்கள்.


ஏற்றங்கொண்டறிவு

ஏகி மேலோங்கி மனிதன்

ஆகியவழியெலெல்லாம்

நெகிழி புகுத்தி

அகிலமடியையின்று

அவலமாக்கி விட்டான்.


ஆழி குளமாறு

எழிலேரிக்கரையெல்லாம்

வீதிவழியெங்கும்

மீதியின்றியிடம்-கண்

மோதிக்ககிடப்பதெல்லாம்

வேதியல் அழிவற்ற

நெகிழிக்கழிவன்றோ.


நூறாண்டு முன்னே

யாரார் கண்டார்

பார் மீதிலிங்கே

போராக குவிந்த

பேரிமயக்குப்பை?


நாமறிந்த வகையில்

கழிவெல்லாமன்று

கழிவின்றி மண்ணில்

மக்கியழிந்து

மண்ணோடுமண்ணாகி

பார்மடியில் உயிராய்

மீண்டெழக் கண்டோம்


யார்கொண்ட சாபம்

கழிவெல்லாமின்று

அழிவின்றி நின்று

பலியாக மீண்டும்

உயிர் கொல்லக்

கண்டோம்


மறுதலித்து நெகிழி

மாற்றீடு கண்டு

மரபுவழி மீண்டு

மனிதர் நாம்

திரும்பி

இயற்கை நேயம்

காத்து இயைந்து வாழ

விளைதல் காலமிடும்

ஆணை


மீறி மேலும் முன்னே

ஏறிநாமும்

சென்றால்

இயற்கையெம்மை ஏறி

வதம் கொள்ளும்

திண்ணம்


-தமிழினியன் பிரபாகரன்-

Monday, April 13, 2026

பேரண்டமா

 பேரண்டமா!?

பிரபஞ்சமா!?

எது பெரியது!?

தெரியவில்லை!

எதுவானாலும்

நான் அதில்

கடல் மணல் துகளின்

கோடியிலொரு

பங்கின்

பலகோடியிலும் 

ஒரு பகுதி தானென

நானறிவேன்!

ஒலியல்ல!

ஒளியுமல்ல!

வேகப்போட்டியில்

இதை விஞ்ச 

இன்னுமொன்றை

யாராலும் சொல்ல முடியாது!

அந்த மனதிலேறி

இமைப்பொழுதில்

பல்லாயிரம் லட்சம் கோடி

ஒளிவருடம் தாண்டிச் சென்று

ஒரு புள்ளியில் நின்று

சுற்றிக் கொஞ்சம் !

பார்த்தேன்!

சிரிக்காதீர்கள்

மனக்கண்ணால்

தான்!

சிதைந்து போனதென்

சித்தாந்தங்கள் பல!

ஜாதி கரைந்தது!

இனம் தொலைந்தது!

மொழி மறந்தது!

நானென்ற நானே

எனக்குள் எதுவுமில்லா

வெறும் ஒன்றாய்ப் போனேன்!

இறைவனென்று

சொல்லி 

இங்கு மனிதர்கள் நாங்கள்

வகுத்துச்சொன்ன

பல்லாயிரம்

பைத்தியக்கார

போதனைகளில்

ஒன்றைத் தவிர

மற்றெல்லாம்

அவனவன் வசதிக்கும்

வாய்ப்பிற்கும்

ஏற்பச் சொன்ன

பொய்களென

புரிந்து போனது!

இறைவன்

உருவமில்லாதவன்!

எங்கும் நிறைந்தவன்!

என்பதைத் தவிர

அனைத்துமே 

வெறும் அபத்தங்கள்!

கிரகங்கள்,நட்சத்திரங்கள்,பால்வெளிகள்,அண்டங்கள்,பேரண்டங்கள்,பிரபஞ்சங்களென அனைத்துமங்கே ஏதோவொரு அறிய முடியா விதிக்கமைய ஆங்காங்கே ஒரு ஒழுங்குமுறையில் அவையவை அவற்றுக்குரிய இடத்தில், ஒழுக்கில் இயங்கி நகர்ந்து கொண்டிருக்க அவையனைத்தையுமே

கட்டிப்போட்டிருக்கும்

அந்த மா,மா,மா,மாபெரும்

கண்ணுக்குத் தெரியாத

சக்தியே!

இயற்கையொன்றே!

இங்கு இறைவனென்று புரிந்து போனது!

கனவு கலைந்து கண்விழித்தேன்

எனக்குள் மதம் கலைந்து

மனம்

தெளிந்திருந்தது!


-தமிழினியன் பிரபாகரன்-

Wednesday, March 25, 2026

 அழுக்காற்று வெள்ளம்

பெருக்கெடுத்தோடும்

அழுக்குமிக்கவிவ்வுலகில்

அடுத்தவன் 

வாழப் பொறுக்காத

மனமதில்

கெடுத்தவனைத் 

தாழப் புதைக்க 

வழிதேடும் மனிதர்கள்

முகமதில் 

புன்னகையுமிழ்ந்து

புறமுதுகில் குத்தி 

தோளதில் 

கரமிட்டணைத்து!

காலிடறி விடும்

போலித்தனமான

முகமூடிக்குள்

மனிதங்களிங்கே

மலினமாகிக்கிடக்கே!


சுயநலமொன்றே

இலக்கிப்போயிங்கு

கிடைக்கும்

பயனனைத்தும்

தனக்கே தனக்கு மட்டும்

தானென்ற

நிலையில்

மனிதர்களிங்கே

ஐந்தறிவு

விலங்குகளாக

அவையோ

மனிதம்

விஞ்சிய

உயிர்களாய்

பரிணாமம்

கொள்கின்றன!


பிறக்காதவர்களே!

இங்கே பிறக்கா 

வரம் கேளுங்கள்!

இறந்தவர்களே!

விடுதலையென்று

மகிழ்ந்து

இளைப்பாறுங்கள்!

இன்னும் இருப்பவர்கள்

நாம் தான் பாவிகள்

நரன்களாளும்

நரகமதில்

இன்னும் 

மனிதம் பேணிவாழ

முடியாமல்

போராடுகின்றோம்!


-தமிழினியன் பிரபாகரன்-

Sunday, February 8, 2026

 ஏறுங்கள்!

ஏறுவதில் தப்பில்லை!


ஏற்றிவிடவும் கொஞ்சம் நேரமொதுக்கி ஏறுங்கள்!


தூக்கி விடவும் கொஞ்சம்

கைகொடுத்து உதவுங்கள்.


ஏறிப்பெற்ற கடதாசி உங்களிடம் மட்டுமிருப்பதிலில்லை பெருமை!


நீங்கள் ஏற்றிவிட்டவர்கள் எத்தனை பேரிடமுள்ளது என்பதில் இருக்கிறது பெருமை!


ஏறவந்தவர்களின் நேரம் களவெடுத்து

ஏறிப்போனபின் நீங்கள்!


கீழே ஏறமுடியாமல் ஏங்கி நிற்பவர்களின்

ஏக்கமுங்களை

சாபமாகித் தொடும் கவனம்.!


அதன்பின் ஏறியதிலும்

ஏறிப்பெற்திலும்

பயனின்றிப் போகும்!


அதனால் நீங்களும் ஏறிக்கொண்டு

கைகொடுத்து ஏற்றிக்கொண்டும்

 

வாங்குங்கள் பட்டத்தை.


ஆத்மதிருப்தியாயது

ஆகாயமேறிப் பறக்கும்

சுகமே தனி!


-தமிழினியன் பிரபாகரன்-

Friday, February 6, 2026

 முகமலர்ந்த சிரிப்பதனுள் 

அகம் முறைத்த 

சினம் புதைத்து 

புஜமணைத்து

புறமுதுகில் 

குத்துகின்ற

நிஜமில்லா

மனிதக்

குழுவில்,

புழுவாக நான்

நெளிகின்றேன்

வழியின்றிச் சிரிப்பணிந்து

வலிதாங்கி

வலிதாக்கி

மனமதனை.