Monday, April 13, 2026

பேரண்டமா

 பேரண்டமா!?

பிரபஞ்சமா!?

எது பெரியது!?

தெரியவில்லை!

எதுவானாலும்

நான் அதில்

கடல் மணல் துகளின்

கோடியிலொரு

பங்கின்

பலகோடியிலும் 

ஒரு பகுதி தானென

நானறிவேன்!

ஒலியல்ல!

ஒளியுமல்ல!

வேகப்போட்டியில்

இதை விஞ்ச 

இன்னுமொன்றை

யாராலும் சொல்ல முடியாது!

அந்த மனதிலேறி

இமைப்பொழுதில்

பல்லாயிரம் லட்சம் கோடி

ஒளிவருடம் தாண்டிச் சென்று

ஒரு புள்ளியில் நின்று

சுற்றிக் கொஞ்சம் !

பார்த்தேன்!

சிரிக்காதீர்கள்

மனக்கண்ணால்

தான்!

சிதைந்து போனதென்

சித்தாந்தங்கள் பல!

ஜாதி கரைந்தது!

இனம் தொலைந்தது!

மொழி மறந்தது!

நானென்ற நானே

எனக்குள் எதுவுமில்லா

வெறும் ஒன்றாய்ப் போனேன்!

இறைவனென்று

சொல்லி 

இங்கு மனிதர்கள் நாங்கள்

வகுத்துச்சொன்ன

பல்லாயிரம்

பைத்தியக்கார

போதனைகளில்

ஒன்றைத் தவிர

மற்றெல்லாம்

அவனவன் வசதிக்கும்

வாய்ப்பிற்கும்

ஏற்பச் சொன்ன

பொய்களென

புரிந்து போனது!

இறைவன்

உருவமில்லாதவன்!

எங்கும் நிறைந்தவன்!

என்பதைத் தவிர

அனைத்துமே 

வெறும் அபத்தங்கள்!

கிரகங்கள்,நட்சத்திரங்கள்,பால்வெளிகள்,அண்டங்கள்,பேரண்டங்கள்,பிரபஞ்சங்களென அனைத்துமங்கே ஏதோவொரு அறிய முடியா விதிக்கமைய ஆங்காங்கே ஒரு ஒழுங்குமுறையில் அவையவை அவற்றுக்குரிய இடத்தில், ஒழுக்கில் இயங்கி நகர்ந்து கொண்டிருக்க அவையனைத்தையுமே

கட்டிப்போட்டிருக்கும்

அந்த மா,மா,மா,மாபெரும்

கண்ணுக்குத் தெரியாத

சக்தியே!

இயற்கையொன்றே!

இங்கு இறைவனென்று புரிந்து போனது!

கனவு கலைந்து கண்விழித்தேன்

எனக்குள் மதம் கலைந்து

மனம்

தெளிந்திருந்தது!


-தமிழினியன் பிரபாகரன்-

Wednesday, March 25, 2026

 அழுக்காற்று வெள்ளம்

பெருக்கெடுத்தோடும்

அழுக்குமிக்கவிவ்வுலகில்

அடுத்தவன் 

வாழப் பொறுக்காத

மனமதில்

கெடுத்தவனைத் 

தாழப் புதைக்க 

வழிதேடும் மனிதர்கள்

முகமதில் 

புன்னகையுமிழ்ந்து

புறமுதுகில் குத்தி 

தோளதில் 

கரமிட்டணைத்து!

காலிடறி விடும்

போலித்தனமான

முகமூடிக்குள்

மனிதங்களிங்கே

மலினமாகிக்கிடக்கே!


சுயநலமொன்றே

இலக்கிப்போயிங்கு

கிடைக்கும்

பயனனைத்தும்

தனக்கே தனக்கு மட்டும்

தானென்ற

நிலையில்

மனிதர்களிங்கே

ஐந்தறிவு

விலங்குகளாக

அவையோ

மனிதம்

விஞ்சிய

உயிர்களாய்

பரிணாமம்

கொள்கின்றன!


பிறக்காதவர்களே!

இங்கே பிறக்கா 

வரம் கேளுங்கள்!

இறந்தவர்களே!

விடுதலையென்று

மகிழ்ந்து

இளைப்பாறுங்கள்!

இன்னும் இருப்பவர்கள்

நாம் தான் பாவிகள்

நரன்களாளும்

நரகமதில்

இன்னும் 

மனிதம் பேணிவாழ

முடியாமல்

போராடுகின்றோம்!


-தமிழினியன் பிரபாகரன்-

Sunday, February 8, 2026

 ஏறுங்கள்!

ஏறுவதில் தப்பில்லை!


ஏற்றிவிடவும் கொஞ்சம் நேரமொதுக்கி ஏறுங்கள்!


தூக்கி விடவும் கொஞ்சம்

கைகொடுத்து உதவுங்கள்.


ஏறிப்பெற்ற கடதாசி உங்களிடம் மட்டுமிருப்பதிலில்லை பெருமை!


நீங்கள் ஏற்றிவிட்டவர்கள் எத்தனை பேரிடமுள்ளது என்பதில் இருக்கிறது பெருமை!


ஏறவந்தவர்களின் நேரம் களவெடுத்து

ஏறிப்போனபின் நீங்கள்!


கீழே ஏறமுடியாமல் ஏங்கி நிற்பவர்களின்

ஏக்கமுங்களை

சாபமாகித் தொடும் கவனம்.!


அதன்பின் ஏறியதிலும்

ஏறிப்பெற்திலும்

பயனின்றிப் போகும்!


அதனால் நீங்களும் ஏறிக்கொண்டு

கைகொடுத்து ஏற்றிக்கொண்டும்

 

வாங்குங்கள் பட்டத்தை.


ஆத்மதிருப்தியாயது

ஆகாயமேறிப் பறக்கும்

சுகமே தனி!


-தமிழினியன் பிரபாகரன்-

Friday, February 6, 2026

 முகமலர்ந்த சிரிப்பதனுள் 

அகம் முறைத்த 

சினம் புதைத்து 

புஜமணைத்து

புறமுதுகில் 

குத்துகின்ற

நிஜமில்லா

மனிதக்

குழுவில்,

புழுவாக நான்

நெளிகின்றேன்

வழியின்றிச் சிரிப்பணிந்து

வலிதாங்கி

வலிதாக்கி

மனமதனை.

Thursday, January 22, 2026

 மரணம் யாருக்கும் 

பொதுவானது!

வரும் தருணம்

எதுவென்று

தெரியாதது!

மறு கணம் கூட

இங்கு உறுதி

இல்லாதது!

வயதென்று 

வரம்பென்று

பார்க்காதது!

அரசன் 

ஆண்டியெனத்

பிரிக்காதது!

ஓடி ஒழிந்தாலும்

விடாதது!

பின்னெதற்கிந்த

ஆணவ ஆட்டம்!?

ஆசைகள் பின்னோட்டம்!?

இருப்பதைப் பகிர்ந்து

சக உயிரினை மதித்து

சகஜமாய் வாழ எது இங்கே தடுக்கிறது?

சிரஞ்சீவிகள் இருந்தால்

சொல்லுங்களேன்!

Sunday, January 11, 2026

இது புதுசு!நீ புதுசு!


எல்லோரும் போலவே நீயிருந்தால் 

எல்லோரில் யாராய் நீயிருப்பாய்?

வித்தியாசப்படு! 


ஒத்திவைத்தவுன் எத்தனத்தில் 

சொத்தியாகுமுன்னிலக்கு! 

இன்றே செய்! 


முயலாமல் முடியாது 

முன்சென்று நீ வெல்ல! 

முயற்சி செய்!


தோல்விக்குத் துவண்டால் நீ 

கேள்வியின்றித் தொடரும் தோல்வி! 

எழுந்துநில் !


கட்டம் கட்டி முட்டி நின்றால் 

ஒட்டு முறிந்து விலகுமுறவு!

விட்டுக்கொடு! 


மறக்காத் துரோகம் உனையென்றும் 

உள்ளிருந்துருக்கும்! 

மறந்துவிடு! 


மன்னித்தல் உன்னை 

மனிதரில் மாண்புறுத்தும் !

மன்னித்து விடு!


செல்லும் செல்வத்தோடு 

செல்லாதிருக்கவுன் புகழ் !

தானம் செய்!


-தமிழினியன் பிரபாகரன்-