Saturday, June 20, 2015

நிர்வாணம் கொள்!

நிர்வாணம் கொள்!

எதிர்பார்ப்பென்னும்
எடைகொண்ட சேலை
களைந்துன் மனதில்
நிர்வாணம் கொள்!


உறவென்னும்
உறை பூண்டால்
உன்வரை மட்டும்தான்
உள்ளெதல்லாம் வேண்டப்படும்!


கொடுப்பதற்கு மட்டும் நீ
எடுப்பதற்கு உரித்தில்லை!
எடுப்பதற்கும் நினைத்தாலோ
கடுப்பான முரண் தொடுவாய்!


எட்டாத முந்திரியாய்
எதிர்பார்ப்பை விட்டகலு
கட்டாயம் சலனமின்றி
பதிந்தெளியுமுன் மனது


உறவுகளின் உன்னதமே
உணர்வுகளின் பகிர்வதில்தான்
உண்மையிது உணராத
உறவிலென்ன வேண்டுவது!


முரண்பாடு முற்றிப்போர்
திரண்டெழும் போதெல்லாம்
வரண்ட நம் எதிர்பார்ப்பை
சரணடைந்து விட்டுத்தான்


உறவோடொன்றிணைய
தொடர்ந்ததை கொண்டு செல்ல
வெண்கொடி பறக்க விட்டு
பண்பட்டு அடங்குகிறோம்!


நிர்வாணம் கொண்டு மனம்
துடைத்தெறிந்த எதிர்பார்ப்பில்
துளிர்க்கட்டும் நிம்மதி!
வீனெதற்கு அவமானம்!?


-தமிழினியன் பிரபாகரன்-

No comments:

Post a Comment