கல்லுக்குள் தேரைக்கும்
அளந்தடிசில்
வைத்தவன் !
அரிசியில் உரியவன்
பெயர் -அறிந்து
குறித்தவன்!
அரியே உன்னிடம்
அறியவோர்
கேள்வி?
பகிர்வில்
உனக்கேன் பாரினில்
பாரபட்சம்?
சோமாலியா தேசத்து
சொந்தங்களை
மறந்ததேன்?
பட்டினியும் பஞ்சமும்
பத்திரம் போட்ட
உரிமையா ?
பஞ்சமும் தரித்திரமும்
வஞ்சம் தீர்த்து
துரத்துவதேன்?
மில்லியனில் ட்ரில்லியனில்
ஒரு பத்துப் பேர்
உறங்குகையில்
ஒரு மில்லி
நீரின்றி மில்லியன்
பேர் வாடுவதேன்?
ஆத்திகனா நாத்திகனா?
எனக்கே
என்னைப் புரியவில்லை !
எனக்கெல்லாம்
தந்தவன் நீ
என்பதனால்
துதி பாடி
துதிக்க உன்னை
என்னால் முடியவில்லை!
எல்லாருக்கெல்லாம்
தந்திருந்தால்
நீ!
எத்தனை அழகாய்
இருந்திருக்கும்
பூமி?
இறைவா நீ இல்லை
என்பதில் உடன்பாடில்லை
எனக்கு
இருக்கிறாய் என்பதற்கு
சமன்பாடுமில்லை
எனக்கு !
முரண்பாடுகளின் மொத்த
உருவாய் தெரிகிறாய் நீ
எனக்கு?
-தமிழினியன்-
No comments:
Post a Comment