Sunday, May 3, 2015

நான் மகான்!நீயும் மகான்!


Post
எந்த வருடம்!?
எந்த மாதம்!?
எந்த நாளின்!?
எந்த மணித்துளியில்
எந்தன் மரணம்!?
தெரியாதெனக்கு!

ஆனால்

இந்த வருடம்
இந்த மாதம்
இந்த நாளின்
அடுத்த மணித்துளியில்
எந்தன் மரணம்
என்று வாழ்ந்தேன் !

என்னை மறந்தும்
எள்ளள வேனும்
எந்த உயிரும்
என்னால் நோகப்
பண்ணவில்லை!

அடுத்த நொடியில்
அழியுமென் ஆன்மா
அகிலம் வாழும் நொடிகள்
தோறும்
அழியா வாழ
குறியாய் இருந்தேன் !

அதனால் ஏனோ!?
மறந்தும் என்னால்
மனிதம் தொலைக்க
முடியவில்லை!

மரணம் மறந்த
வாழ்க்கை  மண்ணில்
மனிதம் தொலைக்கப்
பண்ணும் என்று
கண்டும் கேட்டும்
உணர்ந்த உண்மை
உள்ளே எனக்குள்
உறைந்த போது
உளியால் கொத்தி
செதுக்கிக் கொண்டேன்

''எந்தன் மரணம்
அடுத்த நொடியில் !''

அந்த நொடியில்
நானும் மகானாய்
என்னைக் கண்டேன்!

இன்று வரையும்
மனிதம் தொலைக்கா
மனிதன் ஆனேன் !

மரணம் மறக்கா
மனிதன் ஆனால்
நானும் மகான் !
நீயும் மகான் !

-தமிழினியன்-

No comments:

Post a Comment