Saturday, May 2, 2015

காமம் மேவியிங்கு காதல்!

காமம் மேவியிங்கு காதல்

Post
அகம்பார்த்தன்று  பிறந்த  காதல்
யுகம்யுகமாய் நின்றிங்கு வாழ !
புறம்பார்த்திங்கு பிறக்கும் காதல்
தரந்தாழ்ந்தீசலாய் ஓர்நாளில் மாயும்!

காவியங்கள் போற்றியாங்கு வளர்க்க
பாவிலக்கியப் பொருளாய் நின்ற
காதலின் உயர்கண்ணியம் தாழ்ந்து
சாதலில் வீழ்தல் கண்டுவெந்தேன்!

காமம் மேவியிங்கு காதல்
சாமப் பொழுதொன்றில் தீர்ந்து
மோகக்குளம் வற்றிப்போக
போகம் முடிந்த வயலாய்க்காயும்!

நாயின் நரியின் காமம் ஒத்து
பாயும் வண்டாய் பூக்கள் மேவி
நீயும் துய்த்த காதல் ஓர்நாள்
மேயும் உந்தன் உள்ளம் வருத்தி!

உடலோடுள்ளம் உள்ளும் புறமும் தீட்டாய்
ஆகாத் துணை தான் வேண்டின்
புடமாய்ப் போட்ட பொன்னாய் நீயும்
வாகாய் வாழ்தல் வேண்டுமன்றோ !

காதல் புனிதம் காத்து நீவீர் !
காமம் போர்த்தா காதல் கொண்டு
சாதல் மட்டும் வாழும் காதல்
காமம் தாண்டி செய்தல் வேண்டும் !

-தமிழினியன்-

No comments:

Post a Comment