Saturday, May 2, 2015

வேலை இல்லாப் பட்டதாரி !

வேலை இல்லாப் பட்டதாரி !

Post
மூவெட்டு வருடங்கள்
முக்கிப்பெற்றேன்
ஓர் பட்டம் !

முச்சந்தி மண்ணெடுத்து
கண்ணேறு கழித்தாள்
என்னன்னை !

உச்சந்தலை
முகர்ந்து உச்சி குளிர்ந்தார்
என்தந்தை

எச்சங்கள் எதுவுமின்றி
இழந்தவை
தான் எத்தனை?

அத்தனையும் ஏன்
அதற்குமேலும்
பெற்றவன் இவன்
மீட்டெடுப்பான்
என்று அத்தனை
எதிர்பார்ப்புகள் !

அத்தனையும்
நிறைவேற்றும்
கனவோடு
நேர் நிமிர்ந்த பார்வையுடன்
நெஞ்சம் நிமிர நடைபோட்டேன்!

வாங்கிய பட்டம்
பத்திரமாய் நெஞ்சோடு!
நெஞ்சுக்குள் ஆயிரம்
கனவோடு நெஞ்சம்
நிமிர நடை போட்டேன் !

இருந்தும் என்
வேலை தேடும்
வேட்டையில்
வேளைகள் என்னை
வேட்டையாடின

நாட்கள் வாரங்களாக
வாரங்கள் மாதங்களாக
மாதங்கள் வருடங்களாக
வேளைகள் என்னை
வேட்டையாடின

வேட்கைகள்
தேய் பிறையாகி
என் எதிர்பார்ப்புகள்
இன்று
அமாவாசைக்குள்!!

-தமிழினியன்-

No comments:

Post a Comment